Saturday, July 26, 2014

‘தூர்’ என்ற தலைப்பிலே கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய இந்த கவிதை ‘கணையாழி’ பத்திரிகையில் 33ஆவது ஆண்டு மலரில் வெளி வந்தது. எழுத்தாளர் சுஜாதாவால் பிரசுரத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த கவிதையை ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் சுஜாதா சிலாகித்து பேசி படித்துக்காட்ட,பார்வையாளர்களில் ஒருவரான இயக்குனர் பாலு மகேந்திரா வெகுவாக அந்த கவிஞரின் பால் ஈர்க்கப்பட்டார்.பின்னர் ஒரு நாளில் நா. முத்துக்குமார் அதே இயக்குனரிடம் துணை இயக்குனராக சேர இந்தக் கவிதை வழி வகுத்தது. ( ஆனந்த விகடன் 26.3.2014)
தூர் 

“வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கு ஒரு முறை
விசேஷமாக நடக்கும்
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்.
கொட்டாங்கச்சி,கோலி,கரண்டி
துருப்பிடித்த கட்டையோடு உள் விழுந்த
ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்,
சேற்றுக்குள் கிளறி
எடுப்போம் நிறையவே!
‘சேறுடா  சேறுடா ‘ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தேபோனார்
மனசுக்குள் தூர் எடுக்க”

1 comment:

  1. இதற்கு நான் மிக மிகப் பெரிய பதில் எழுத வேண்டும். நீ தூண்டி விட்டால் "தமிழ்ப் புதுக் கவிதைகள்" என்று ஒரு ஒரு thesis ஸே எழுத வேண்டும். ஒன்று மட்டும் சொல்லி முடிக்கிறேன். உன் நட்பு எனக்குக் கிடைப்பதற்கு முன்னால் நான் மூன்றரை வருடம் (19.5 வயது முதல் 23 வயது வரை ) இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் clerk ஆகப் பணி புரிந்தேன் அல்லவா ? அதுவே இன்றுவரை என் வாழ்வின் பொற்காலம். வாழ்வை 24 மணி நேரம் வாழ்ந்தேன். What I mean is I didn't just "exist" I "lived". முக்கிய காரணங்கள் -1. வேலை நேரம் 9-5 தான். 2. நான் bachelor ஆக இருந்தேன், 3. என்னைப் புரிந்து கொண்டு ஊக்கிய அம்மா அப்பா 4. இள வயதின் முட்டாள் தனமான நம்பிக்கை - (மனதில் வலியுடன் என் பாரதியை quote செய்கிறேன்) --- ஆத்ம ஜெயம் என்ற பாரதியின் ஒரு தனிக் கவிதை -
    "கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம் வசப்பட லாகாதோ?"
    இதில் இரண்டாவது வரியை உடல், மனம், ஆன்மா என்று மூன்று பரிமாணங்களிலும் நம்பியது என் வயது. கையில் வருமானம் ஈட்டும் பொருளாதார சுதந்திரத்துடன் நான் அந்த மூன்று வருடங்களை வாழ்ந்தேன். இல்லை. வெடித்துச் சிதறினேன், அந்தக் கால கடிதம் பற்றி, உன்னிடம் முழுதாகச் சொல்ல நமக்குள் நேரமில்லை. அதைப் பற்றியும் ஒரு தனி காவியம் வடிக்க முடியும். எனக்குத் தேவை ஒரு தூண்டல். ஆனால் எதற்கும் எந்த அர்த்தமும் இந்த வாழ்வில் இல்லை. "மரணம், இந்த ஒரே விடைக்கா.. இத்தனைக் கேள்விகள்????" - அடுத்த தலைமுறைக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் அவர்களுக்குப் புத்தகங்கள், கவிதைகள், சுய சரிதைகள், இலக்கியங்கள், இலக்கிய விவாதங்கள்.. இவை எல்லாமே அந்நியப் பட்டுவிட்ட நிலையில் "யாருக்காக எழுதிய வேண்டும் ?" என்ற கேள்வி.. எல்லாத் தீயையும் உள்ளிருந்து அணைத்து விட்டது.

    ReplyDelete